Site icon Chennai City News

‘ஒரே நாடு, ஒரே தேர்தலால் எந்த கட்சிக்கும் ஆபத்து இல்லை’: அண்ணாமலை

‘ஒரே நாடு, ஒரே தேர்தலால் எந்த கட்சிக்கும் ஆபத்து இல்லை’: அண்ணாமலை

சென்னை: ”ஒரே நாடு, ஒரே தேர்தலை பா.ஜ., கொண்டு வரவில்லை; ஏற்கனவே இருந்த ஒரே நாடு, ஒரே தேர்தலைதான் பா.ஜ., திரும்ப கொண்டு வருகிறது; பா.ஜ.,வின் வளர்ச்சி எத்தனை மனிதர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தியுள்ளது என்பதை, பழனிசாமியின் பேச்சு காட்டுகிறது,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: பார்லிமென்டில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல், தொடர்பாக, இரு மசோதாக்களை, பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இதை, பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த 1952ல் நடந்த முதல் பொது தேர்தலில், 494 எம்.பி.,க்கள் இருந்தனர். கடந்த, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நடந்த தேர்தலில், 543 எம்.பி.,க்கள் இருந்தனர். இதுதான் இன்று வரை உள்ளது. இதை நிர்ணயம் செய்து, 2021ல் நீட்டிக்கப்பட்ட காலக்கெடு, 2026ல் முடிவடைகிறது.

பா.ஜ., கொண்டு வந்துள்ள மசோதாவின்படி, 2029க்கு பின் நடக்கும் லோக்சபா தேர்தலோடு, அனைத்து மாநிலங்களுக்கும், சட்டசபை தேர்தல் நடக்கும். தமிழக சட்டசபை தேர்தல், 2026ல் நடக்கும். அதில் வெற்றி பெறும் கட்சி, 2031 வரை ஆட்சியில் இருக்க வேண்டும்.

தமிழகத்தில், 2034ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்கும். இந்தியாவில் நடந்த முதல் நான்கு பொது தேர்தல்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் தான். அதற்கு பின் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, 1967, 1969ல் மாநில ஆட்சிகளை கவிழ்த்ததே காரணம். ஒரே நாடு ஒரே தேர்தலால், ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும், ஆபத்து இல்லை. யாரை குறிவைத்தும் கொண்டு வரவில்லை.

மறைந்த முதல்வர் கருணாநிதி, ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தினால் நாட்டுக்கு வளர்ச்சி கிடைக்கும் என, தெரிவித்திருந்தார். இந்த மசோதா யாருக்கும் எதிரானது இல்லை. ஒரே நாடு, ஒரே தேர்தலால், நாட்டில் வளர்ச்சி ஏற்படும்.

இதற்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், மாநில உரிமையை பறிப்பதாக இருப்பதாக, தி.மு.க., – எம்.பி., கனிமொழி கூறுகிறார். இது எப்படி பறிக்கும் என்பதை, கனிமொழி கூற வேண்டும். அவர், அரசியலுக்காக பேசுகிறார்.

தி.மு.க., அரசு, கோவையில் மறைந்த பாஷா உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் இருக்கும்போது தெளிவாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை வேருடன் அகற்ற வேண்டும். எனவே, கோவையில் வரும் வெள்ளிக்கிழமை கருப்பு நாளாக அறிவித்து, பா.ஜ., சார்பில் ஊர்வலம் நடத்தப்படும்.

பா.ஜ., கூட்டணியில், தினகரன் முக்கிய தலைவராக உள்ளார். பழனிசாமி, பொதுக்குழுவில் தங்கள் கட்சி வளர்ச்சி குறித்து பேசாமல், பா.ஜ., குறித்து பேசுகிறார். பா.ஜ., வளர்ச்சி எத்தனை மனிதர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது என்பதை, அவரது பேச்சு காட்டுகிறது. தமிழகத்திற்கு மாற்று அரசியல் வேண்டும் என்ற பாதையில் தேசிய ஜனநாயக கூட்டணி செல்கிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தலை பா.ஜ., கொண்டு வரவில்லை; ஏற்கனவே இருந்ததைத்தான் பா.ஜ., திரும்ப கொண்டு வருகிறது. தமிழகத்தில், திராவிட கட்சிகள் இல்லாத கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பார்க்கிறோம்.

மக்கள் புதுவித ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். வரும் 2026 தேர்தல் புதிய களமாக இருக்கும். பா.ஜ.,விடம் வலிமையான கூட்டணி உள்ளது. கூட்டணி கட்சிகள் இணக்கமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version