‘ஏன் தமிழில் சொற்களுக்கா பஞ்சம்?’ – கவிஞர் வைரமுத்து கேள்வி!

0
188

‘ஏன் தமிழில் சொற்களுக்கா பஞ்சம்?’ – கவிஞர் வைரமுத்து கேள்வி!

ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். கீரவாணியிடம் பணியாற்றிய மீராலால் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தில் ஹரிஷ் பிரபாகரன் நாயகனாக நடிக்க, மேக்னா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘பனை’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. கவிப்பேரரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பேரரசு, அரவிந்தராஜ், தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தி பேசிய தயாரிப்பாளர் எம்.ராஜேந்திரன், “கவிப்பேரரசு ஐயா உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து விருந்தினர்களையும் வருக..வருக..என வரவேற்கிறேன். இந்த படத்தை எடுக்க காரணம், பனைத்தொழில் பாதுகாக்கப்பட வேண்டும், பனைதொழிலாளிகளின் வாழ்க்கையை சொல்ல வேண்டும் என்பது தான். என்னுடைய இணை தயாரிப்பாளர் பிரபாகரன் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். யார் யார் என்ன தொழில் செய்தாலும் சரி, பனை மரங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அதன் நன்மைகள் கிடைக்கப்பெற வேண்டும், என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். இதற்காக தான் நம் கவிஞர் ஐயா வைரமுத்து அவர்களை பாடல் எழுத வைத்தோம், அவர் இந்த படத்திற்கு பக்கபலமாக இருக்கிறார். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளரும் நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் பல விருதுகளை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.

நாயகி மேக்னா பேசுகையில், “மேடையில் பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள், அவர்கள் முன்பு பேசும் போது கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படத்தில் எனக்கு ஒரு சோலோ பாடல் இருக்கிறது, அந்த பாடல் வைரமுத்து சார் வரிகளில் அமைந்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, அவர்கள் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

நாயகன் ஹரிஷ் பிரபாகரன் பேசுகையில், ”எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத தயாரிப்பாளர் ராஜேந்திர அண்ணனுக்கு நன்றி. வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், வைரமுத்து ஐயா, பேரரசு சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் மீராலால் பேசுகையில், “மேடையில் எனக்கு பேச தெரியாது. இங்க இருக்கிற பெரியவர்கள் அருகில் நான் உடகார்ந்ததே பெருமையாக இருக்கிறது. முதலில் வாய்ப்பு கிடைக்க வேண்டும், அப்போது தான் நாம் நிரூபிக்க முடியும். அதனால், எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. அதேபோல், என்னுடன் பணியாற்றிய் பாடகர்கள், இசைக்கலைஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாடல்களை நீங்கள் கேட்டிருப்பீங்க, அதனால நீங்க தான் சொல்லனும். படம் நிச்சயம் வெற்றி பெறும், அதுபோல் பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும், என்று நம்புகிறேன்.” என்றார்.

நடிகை வடிவுக்கரசி பேசுகையில், “அதிகமான விருதுகள் வாங்கியிருக்கும் வைரமுத்து சார் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கிறார் என்றால் இந்த படம் நிச்சயம் நிறைய விருதுகளை வாங்கும். இந்த படத்தில் நாங்கள் கஷ்ட்டப்பட்டு நடித்தோம். அந்த அளவுக்கு வெயில் அதிகமாக இருந்தது. கேரோ வேன் உள்ளிட்ட வசதி எல்லாம் இல்லை. பனைமர ஓலையின் நிழலில் நின்று தான் நடித்தோம். நாங்கள் பட்ட கஷ்ட்டத்தை மேலே இருக்கிற பிரபஞ்சம் ஏற்றுக்கொண்டது என்றால், இந்த படத்திற்கு நிறைய விருதுகள் கிடைக்கும்.

படத்தின் ஒளிப்பதிவாளர், இயக்குநர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். ஹீரோ கதபாத்திரத்திற்கு ஏற்ற இன்னொசண்டாக இருக்கிறார், ஹீரோயின் அழகா இருக்காங்க, இரண்டு பேரும் சேர்ந்து ரொம்ப கஷ்ட்டப்பட்டு நடிச்சாங்க, நிச்சயம் அவங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. வைரமுத்து சார் பாடல் எழுதியதே பெரிய விசயம், இப்போ நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது இன்னும் பெரிய விசயம் என்றாலும் அவர் சினிமாக்காரர் என்று சொல்லலாம். ஆனால், சினிமாவுக்கு சம்மந்தம் இல்லாத விக்கிரமராஜா சார் இதில் பங்கேற்றிருப்பது ஆச்சரியமாக இருந்தது. பிறகு தான் யோசித்தேன் ஒருவேளை அவர் தான் இந்த படத்தை புரோமோட் செய்யப்போகிறார் என்று, அவருக்கு ஏகப்பட்ட தொழில்கள் இருக்கிறது, அதில் ஒன்றாக இந்த படத்தையும் விளம்பரப்படுத்தி வெற்றி பெற செய்தால், இன்னும் பல சிறிய படங்கள் வரும், எங்களை போன்றவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நிச்சயம் அவர் இதை செய்வார் என்று நம்புகிறேன். ஊடகத்தினர் இந்த படத்தை விளம்பரபடுத்தி வெற்றி பெற செய்ய உதவ வேண்டும், என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.” என்றார்.

இயக்குநர் அரவிந்தராஜ் பேசுகையில், “கவிஞர் கவிப்பேரரசு பாடல் வரிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறுவதோடு மட்டும் அல்ல அவரை போல நிறைய விருதுகள் வாங்கும் என்ற நம்பிக்க இருக்கிறது. இந்த படத்தின் அழைப்பிதழை பார்த்த போது வைரமுத்து ஐயா எழுதிய தனிப்பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அது மரத்தை அழிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் ஒரு பாடல், அந்த பாடலில் மனிதன் பிறந்ததில் இருந்து, இறப்பு வரை மரம் அவனது வாழ்வில் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை மிக அழகாக சொல்லியிருப்பார். அந்த பாடலின் இறுதியில், ”மனிதன் வாழ்க்கையில் அனைத்தும் மரம் தான் மரம் தான், ஆனால் மனிதன் இதை ஏனோ மறந்தான் மறந்தான்” என்று சொல்லியிருப்பார், எனக்கு மரங்களை பார்க்கும் போது எல்லாம் அந்த பாடல் தான் நினைவு வரும். அதேபோல் அவருடைய வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு ரசனை மிக்கதாய் இருக்கும், “மல்லிகையை நீ சூடிக்கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்” என்று எழுதியிருக்கிறார், இது யாரும் யோசிக்க முடியாத கற்பனை. இந்த இடத்தில் தான் அவர் என்னை கவர்ந்தார். நிறைய நேரம் அவரது வரிகளால் வியந்திருக்கிறேன். ”இரவின் மீது வெள்ளை அடித்தால் விடியல் என்று அர்த்தம்” என்றார். இதெல்லாம் நான் யோசிச்சி பார்க்க முடியாத கற்பனை. அப்படிப்பட்ட மனிதர் உடன் மேடையில் உட்கார்ந்திருப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

பனை மரத்தை பாதுகாக வேண்டும் என்பது அற்புதமான விசயம், நாம் செய்ய வேண்டிய விசயம். இதை படத்தில் சொல்லியிருப்பது பாராட்ட வேண்டிய விசயம். இதற்கு அற்புதமாக இசையமைப்பாளர் மணிலால் இசையமைத்திருக்கிறார். படம் நிச்சயம் திரையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்ற எனது ஆசிகளை கூறி, படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இங்க நான் பேசுவதற்காக வரல, கவிப்பேரரசு பேச்சை கேட்பதற்காக தான் வந்திருக்கிறேன். அவருடைய பேச்சை, அவரது கவிதையை நேரடியாக கேட்பதே பெரிய விசயம், அந்த பெருமைக்காக பெற தான் இங்க வந்திருக்கிறேன். கவிப்பேரரசு வைரமுத்து, என்பது வெறும் பேரல்ல. தமிழுக்கு கிடைத்த பெருமை, தமிழுக்கு கிடைத்த கெளரவம், தமிழர்களுக்கு கிடைத்த தவப்புதல்வன். அவரிடம் இருந்து தான் ஒரு விசயத்தை பின்பற்றுகிறேன். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களுக்கு எல்லா படங்களிலும் ஒரு அறிமுக பாடல் இருக்கும். அந்த பாடல்கள் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும். உதாரணத்திற்கு ரஜினிகாந்தின் “வந்தேண்டா பால்காரன்”, “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்” போன்ற பாடல்களை சொல்லலாம். இந்த பாடல்கள் தியேட்டரோடு செல்லாமல், மக்களிடம் ஆழமாக சேரும். அப்படிப்பட்ட பாடல்களில் மெட்டுக்கு வரிகளை நிரப்பாமல், மக்களுக்கு தேவையான விசங்களை சேர்த்து எழுதுவார்கள். அந்த பாடலில் ரஜினிகாந்த் நடித்தாலும், அதன் உண்மையான ஹீரோ வைரமுத்து சார் தான். அப்படி நான் சில உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கும் போது, ஹீரோவுக்கு அறிமுகப்பாடல் வைக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது அதற்கான பாடலை வைரமுத்து சார் போல் எழுத வேண்டும், என்று நினைத்து எழுதினேன். அதனால், நான் இந்த வழியில் அவரை காப்பியடித்தேன். அதனால், என் படங்களின் தொடக்க பாடல்களை நான் எழுதினாலும், என்னை எழுத தூண்டியது வைரமுத்து சார் தான். ஆம், இந்த பேரரசை எழுத தூண்டியது கவிப்பேரரசு தான். ஒரு இசையமைப்பாளரின் ட்யூனுக்கு பாடலசியராக பாடல் எழுதுவது வேறு, ஒரு கவிஞனாக கவிதை எழுதுவது வேறு. நிறைய பாடல் ஆசிரியர்கள் பாடல் வரிகளை எழுதுவார்கள். ஆனால், வைரமுத்து சார் ட்யூனுக்கு கவிதையை மட்டுமே எழுதுவார். அவர் எழுதிய வரிகள் அத்தனையும் கவிதை. அவர் பாடல்களை சினிமா பாடல்கள் என்று சொல்லக்கூடாது, சினிமா கவிதை என்று சொல்ல வேண்டும்.

சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி செல்லும் போது கும்பகோணம் டிகிரி காபி என்று பல இடங்களில் இருக்கும். இப்போது அதுபோல் விளம்பரங்களை காணவில்லை, இப்போது இருப்பது கருப்பட்டி காபி வந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் கருப்பட்டி தான். அதிகமாக பிரபலமடைந்திருக்கும் கருப்பட்டியை மேலும் பிரபலமடைய செய்வதற்காக தான விக்கிரமராஜா அவர்கள் இந்த படத்தின் நிகழ்ச்சிக்கு கலந்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இன்று ஏகப்பட்ட பானங்கள் வந்துடுச்சி ஆனால் பனை பானத்திற்கு நிகரான பானம் எதுவுமில்லை. பனைமரம் ஏறுவது இளைஞர்களுக்கான ஒரு வீரவிளையாட்டு போல் இருந்தது. அதேபோல் பனை ஓலை போல் ஒரு ஏசி இல்லை. வெயில் காலத்தில் குளிர்ச்சியை கொடுக்கும் பனை ஓலை, குளிர் காலங்களில் வெப்பத்தை கொடுக்கும், இது அதிசயம் தானே. வைரமுத்து எழுதியிருக்கும் வரிகள் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது, பனை மரம் இல்லை என்றால் பரவைகள் எங்கே போகியிருக்கும், பனை ஓலை இல்லை என்றால் தமிழ் அழிந்துபோயிருக்கும், என்று எழுதியிருக்கிறார், அடங்கப்பா என்ன ஒரு வார்த்தை. பனை ஓலை இல்லை என்றால் தமிழ் என்னவாயிருக்கும். இன்று திருவள்ளுவரின் ஆடையை சில காவியாக மாற்றுகிறார்கள், சில கருப்பு ஆடை அணிவிக்கலாம். ஆனால், அவர் கையில் இருக்கும் பனை ஓலை என்பதை யாராலும் மாற்ற முடியாது. அது தமிழரின் அடையாளம். இவ்வளவு சிறப்புகள் நிறைந்திருக்கும் பனை படத்திற்கு வைரமுத்து பாடல் எழுதியிருப்பது அதைவிடவும் சிறப்பு. எனவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், “பனை மரம் என்பது என்பது ஒரு காலத்தில் சாதாரணமாக இருந்தது. அப்போது பனை பொருட்களை பயன்படுத்துபவர்கள் ஏழைகள். அப்போது அரிசி சோறு சாப்பிடுபவர்கள் பணக்காரர்கள், கம்ப கூழ், கேப்பங்கூழ் சாப்பிடுபவர்கள் ஏழைகள். ஆனால், இன்று கம்ப கூழ், கேப்பங்கூழ் சாப்பிடகிறவர்கள் பணக்காரர்கள், அரிசி சோறு சாப்பிடுகிறவர்கள் ஏழைகள். அதுபோல் தான் பனைக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. பனை மரம் என்பது நாங்கள் ஆண்டு அனுபவித்தவர்கள். 30 வருடங்களாக பனை பொருட்களை உண்டு, குடித்து நான் வாழ்ந்திருக்கிறேன். பனை மரத்தின் ஓலையில் செருப்பாக பின்னி பயன்படுத்துவோம், பனை நாரை பின்னில் கட்டில் செய்து படுப்போம், நல்லா குளிர்ச்சியாக இருக்கும். எல்லா வகையிலும் பனை பயன்பெறும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் பனைக்கெழுங்கு சாப்பிட்டால் கேன்சர் வராது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு இருந்த உணவு, சுகாதாரம் இன்று இல்லாமல் போய்விட்டது. இந்த படத்தின் பாடல் வரிகளில் கவிப்பேரரசு எழுதியிருக்கிறார், வியாபாரிகள் பனைவெள்ளத்தில் கலப்படம் செய்கிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு நான் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். வியாபாரிகள் கலப்படம் செய்யவில்லை, அதற்கு சட்டமே இருக்கிறது. இன்று கலப்படம் இல்லாத எண்ணெய் சாப்பிடுபவர்கள் இருக்கிறீர்களா?, இன்று பாமாயில் எண்ணெய் விலை கூடினால் தேங்காய் எண்ணெய் விலை கூடும், கடலை எண்னெய் விலையும் கூடும். அப்படியானால் என்ன அர்த்தம், பாமாயில கலந்தால் தான் தேங்காய் எண்ணெய், கடலெண்ணெய். சட்டம் சொல்லுது இனிப்போட இனிப்பை கலந்துக்கொள்ளலாம் என்று. அதனால் தான் நாங்க இன்று பனைவெள்ளம் சாப்பிட வேண்டும் என்றால், ஊரில் ரூ.360 கொடுத்து ஒரு கிலோ வாங்குகிறோம். ஆனால், இங்கு ரூ.160-க்கு ஒரு கிலோ பனைவெள்ளம் விற்கிறார்கள், அது பனை வெள்ளம் இல்லை, சர்க்கரையோடு கலந்த பனைவெள்ளம். சில ஊரில் தேன் கூடு வளர்ப்பவர்களின் வீடுகளில் சர்க்கரை மூட்டை இருக்கும். பதநீர் என்பது அவ்வளவு வலிமையை கொடுக்கும் உணவு. நாங்கள் அன்று பசிக்காக பதநீர் குடித்தேன், அதன் பிறகு தான் தெரிந்தது, 120 கிலோ உப்பு மூட்டையை தூக்குகிற அளவுக்கு என் எலும்பு மற்றும் தசைக்கு வலிமை கொடுத்தது பதநீர் என்பது தெரிந்தது. தமிழகத்தில் இருந்து வேலை வாய்ப்பு இல்லை, என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மை இல்லை, இங்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது. இங்கு வட இந்திய இளைஞர்களுக்கு தான் வேலை கொடுப்பதாக சொல்கிறார்கள், என்னிடமே பலர் கேட்கிறார்கள். ஆனால், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வேலை செய்வதற்கு நம் ஆட்களின் உடம்பில் வலு இல்லை. அதனால் தான் வட இந்தியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டி இருக்கிறது. அதற்கு காரணம் நம் உணவு முறை மாற்றம். இன்று அரசு பனை மரத்தை தேசிய மரமாக அறிவித்திருக்கிறது என்றால், அதனை பாதுகாக்க வேண்டும் என்பது தான்.

இன்று தக்காளி, வெங்காயம் பத்து ரூபாய் விலை கூடி விட்டால், ஐயயோ என்று சொல்கிறார்கள். ஆனால், தங்கம் விலை கூடிவிட்டால் எதாவது கேட்கிறீர்களா?, வருடத்திற்கு ஒரு முறை திருவிழா போல் கூட்டம் இருக்கிறது. பெரிய பணக்காரர்களாக இருப்பார்கள், ஆடம்பர காரில் வந்து இறங்குவார்கள், அவர்கள் பூ வியாபாரிடம் பேரம் பேசுவார்கள். நான் சொல்வதென்றால், பூ வியாபாரிகளிடமும், நுங்கு விற்பனையாளர்களிடமும் பேரம் பேசாதீர்கள்.

பனை மரத்தை மையமாக வைத்து இந்த படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் ராஜேந்திரன் அண்ணனுக்கு பாராட்டுக்குள். வியாபாரி என்பவர் ஜெயிக்க வேண்டும், இந்த படத்தை தயாரித்த ராஜேந்திரன் அண்ணனும் ஜெயிக்க வேண்டும். பனைமரம் பாதுகாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை எடுத்திருக்கும் அவர் நிச்சயம் ஜெயிப்பார். பனை மரம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், இந்த படத்தை நாம் தியேட்டரில் பார்க்க வேண்டும். தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை இந்த படத்திற்கு பக்கபலமாக இருக்கும், என்று சொல்லி வாழ்த்து விடைபெறுகிறேன்.” என்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில்,  “இந்த படத்தின் தலைப்பு ‘பனை’ என்பது மண்ணின் பெயர், மக்களின் பெயர், கலாச்சார குறியீடு என நினைக்கிறேன். தற்போது வரும் படங்களின் பெயர்களைப் பார்க்கையில் துக்கப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். ஏன் தமிழில் சொற்களுக்கா பஞ்சம்?

கருத்துகள் மற்றும் படத்தின் காட்சியை விரிவுபடுத்தும் வகையில்தான் படத்தின் பெயர்கள் இருக்க வேண்டும். முந்தைய காலத்தில் படத்தின் கதையை பட தலைப்புகள் சொல்லிவிடும். தயவுசெய்து படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள். இதனை வேண்டுகோளாக வைக்கிறேன். பாமரன் தமிழை விரும்புகிறான். ஆனால், நீங்கள் பாமரனிடம் இருந்து தமிழை தள்ளி வைக்கிறீர்கள்” எனப் பேசினார்.

மேலும், தொடர்ச்சியாக பேசிய அவர், “இந்தியாவில் 11 கோடி பனை மரங்கள் உள்ளது. ஆனால், அதில் 6 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. தமிழ்நாட்டு மரம் இந்த பனை மரம். ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு கொடி உள்ளது போல, சேரனுக்கு பனை பூ மாலையை அணிவித்த வரலாறு இங்கு உண்டு. தமிழ்நாட்டின் மரமாக பனை மரம் உள்ளது. அது சொல்லும், பனை மரத்தின் முக்கியத்துவத்தை” என்று எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் இறுதியில் இசை குறுந்தகடை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பெற்றுக்கொண்டார்.