விவாகரத்து வழக்கு ; நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் மனம் விட்டுப் பேச நீதிமன்றம் அறிவுறுத்தல்!
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டுப் பேச சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, மத்தியஸ்தர் நேரில் ஆஜராகி, இன்னும் சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசும்படி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த உத்தரவை அடுத்து, வழக்கு மீண்டும் சமரச தீர்வு மையத்தில் வந்தத அப்போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு வார்த்தை நடத்தினர்.